My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

விழியோரத் தேடல் நீ Epi-17(3)

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
256
தேடல் - 17(3)

ழையாவிற்கு இப்பொழுது அவளவனின் மேல் பரிதாபம் ஏற்பட்டது. பிறந்ததில் இருந்து தான் நினைத்த எல்லாவற்றையும் பணத்தின் மூலம் அடைந்த அவனுக்கு அன்பை பணத்தின் மூலம் வாங்கமுடியாது என்பது புரியாமல் போனது ஏன்? என்ற கேள்வி உண்டானது .

பார்வதி பிள்ளைகளுக்கு அடக்கத்தை கற்று கொடுத்து வளர்த்திருந்தாள். இருப்பதை கொண்டு சமூகத்தில் சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்திருந்தாள்.

எனவே, மஹிந்தனின் இந்த இயல்பு, அவளுக்கு பெறும் நெருடலாய் இருந்தது. அவன் தன் அருகில் இருக்கும் நேரம் அவன் பால் சாயும் மனது அவனை காணாதபோது, அவன் முன்பு தன்னிடம் நடந்துகொண்டவிதம் நினைவிலாடி அவனின் மேல் ஏற்பட்ட மயக்கம் விலகி அவனை வெறுக்கும் படி செய்தது .

என் விருப்பமும் அவனாக என் வெறுப்பும் அவனாக மாறி மாறி என்னை கொல்கிறானே...! என்று அவனைப் பற்றியே மனதில் அசை போட்டுக்கொண்டு, கண்ணுக்கு மைதீட்டி கொண்டிருக்கும் போது கிளம்பி வந்த மஹிந்தன் தான் வந்ததை கூட உணராமல் இருந்தவளை, இன்ச் இன்ச் ஆக ரசித்தபடி அவளின் கூந்தலை அருகில் வந்து தடவியதும் சுயநினைவிற்கு வந்தவள் அனிச்சை செயலாக அவனிடம் இருந்து விலகி எழுந்தாள் .

“இப்போ எதுக்கு விலகிப்போகிற?” என்று எரிச்சலுடன் கூறியவன், அவள் அருகில் வந்து அவளின் பின்னலை கையில் எடுத்து உன் முடி கூட என்னை மயக்குது பேபி .

எப்படி இவ்வளவு நீள முடியை மெயின்டயின் பண்ற” என்று கிறக்கத்துடன் கேட்டான் .

“என் அம்மாவிற்கு முடியை கொஞ்சம் வெட்டிக்கொள்கிறேன் என்று கேட்டால், அவ்வளவு கோபம் வரும். அதனால் என்னால் வெட்ட விட மாட்டாங்க.” என்று சலிப்புடன் கூறினாள்.

“உன் அம்மாவிற்கு என்னை போல் உன் முடியின் மீது ஓர் மயக்கம் போல, அதனால் தான் வெட்ட விடல” என்றவன்,

“அதுசரி முடி வெட்டக் கூட நீ உன் அம்மாவிடம் கேட்டுத்தான் செய்வயா?” என்று ஆவலுடன் பேச்சுக்கொடுத்தவாறு தன்னிடம் அவள் இயல்பாக இருக்கும் படி பார்த்துக்கொண்டான் .

அப்பொழுது அவனுடைய மொபைலில் அழைத்த வருண் “கிளம்பிவிட்டீர்களா? என்று அம்மா கேட்கச் சொன்னார்கள், உங்கள் அம்மா அப்பா வருவதற்குள் நீங்கள் வந்ததால் நல்லதென அம்மா நினைக்கிறாங்க.

உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் இங்க இருக்கும் போது பேசினால் சூழ்நிலை சுமூகமாக இருக்குமென நினைக்கிறாங்க” என்றான்.

“நாங்கள் ரெடி இதோ... கிளம்பிட்டோம் என்று சொல் வருண்” என்றவன் போனை வைத்தான்.

ழையாவிடம் “கிளம்பலாமா பேபி!” என்று கேட்டான் அதற்கு ழையா ம்.. என்று சொல்லியபடி அவனுடன் தன் வீட்டிற்கு போகும் ஆர்வத்தில் வேகமாக முன் செல்ல பார்த்தவளை கை பிடித்து கூட்டிவந்தவன் காரின் முன்பக்க கதவை திறந்து அவளை அமரச்சொன்னவன், சுற்றிவந்து டிரைவர் இடத்தில் அமர்ந்து, காரை எடுத்தான் புன்னகையுடன்

காரின் ஆடியோ பிளேயரை இயக்கி பாடலை ஓடவிட்டான். ழையாவின் வீட்டில், பார்வதி மிகவும் பரபரப்புடன் சமையல் செய்ததை டைனிங் டேபிளில் அழகான டின்னெர் செட்டில் எடுத்துவைத்தவள்,

“வருண்! உன் சட்டைய மாத்து. அவங்க வரும் நேரமாகிவிட்டது” என்று குரல் கொடுத்தபடி ஈஸ்வருக்கு, காலையில் சாப்பிடவேண்டிய மாத்திரையை எடுத்துக்கொடுக்கப் போனார் .

ஈஸ்வரனும், மகள் மற்றும் மஹிந்தனின் பெற்றோரை இன்று ரிசீவ் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தாரானாலும் அவர்கள் எப்படிபட்டவர்களோ...? என்ற கவலையும், நம்மைவிட பெரிய செல்வந்தர்கள் ஆதலால் நம்மை மதிப்பார்களோ...? என்ற ஐயமும் இருந்தது.

மேலும், பத்திரிக்கையில் தன் மகளின் திருமண விஷயம் வெளியானதிலிருந்து போனிலும் வெளியில் எங்கு சென்றாலும் உங்கள் மகள் பெரிய இடத்தைதான் பிடித்துவிட்டாள் என்று சிலர், என்னவோ தன் மகள் தான் மஹிந்தனை மயக்கி கல்யாணம் செய்தது போல் பேசியதும் அவருக்கு வருத்தமாக இருந்தது .

கணவரின் டென்ஷனான முகத்தை பார்த்த பார்வதி, “டென்ஷனாகாதீங்க.., கவியப்பா. நம் மகளின் குணத்திற்கு அவள் வாழ்க்கை நல்லபடியாகத்தான் அமையும்

மேலும் மாப்பிள்ளை நம் மகளை விரும்பி கல்யாணம் செய்திருக்கிறார்... அவர் தன் அம்மாவிடம் கூட நம் மகளை விட்டுக்கொடுக்காமல் தான் பேசியிருக்கார்.. எனவே மனதை போட்டு அலட்டிக்கொள்ளாமல், இந்த மாத்திரையை போட்டுக்கொள்ளுங்க” என்று கூறினாள். .

“என்னவோ… பார்வதி எனக்கு கவியின் முகத்தை பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கும். என் மகளை நல்லபடி வைத்து பார்த்துக்கொள்வானா அந்த மஹிந்தன்? “அவன் மட்டும் என் மகளை கஷ்டப்படுத்தினால் என்னால் தாங்கமுடியாது”, என்று கூறினார் .

“என்னங்க மாப்பிள்ளையை அவன் இவன் என்று பேசாதீர்கள். இப்பொழுது அவர் நம் மகளின் கணவன். மேலும் பல கம்பெனிகளை நடத்திவரும் பெறும் தொழிலதிபர்.

நீங்க சின்னவங்ககளையும் மரியாதையாகத்தான் பேசுவீங்க இப்பொழுது மட்டும் என்ன! புதிதாக இப்படி பேசுகிறீர்கள்?” என்று லேசாக கடிந்து கொண்டாள் .

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே “அம்மா... அக்கா வந்துவிட்டாள்!” என்று குரல் கொடுத்தான் வருண் .

உடனே பார்ப்வதி “டேய்! அவர்களை வாசலில் நிற்க வை நான் ஆரத்தி தட்டு எடுத்துவருறேன்”, என்று கூறினாள் பார்வதி

வாசலுக்கு வந்து கார் நின்றதும் வேகமாக முன்னால் இறங்கப் போன ழையாவின் கை பிடித்து “ ஏய் ! என்ன அவசரம் என் கூட சேர்ந்து வா...” என்று அவளை முன்னே போகவிடாமல் தடுத்தான் மஹிந்தன் .

இருவரும் காரில் இருந்து இறங்கியதும் மஹிந்தன் ழையாவின் கையுடன் தன் கை கோர்த்து நடக்க முயன்றதும், கையை உருவ முயன்றவளின் கையை இருக்க பிடித்தபடி வாசலில் நின்ற வருணிடம் புன்னகைத்தான்.

வருண், “அக்கா! மாமாவுடன் இங்கயே நில்லுங்க.. அம்மா ஆரத்தி தட்டை எடுத்துவர போயிருக்கிறார்கள்” என்று சொல்லும்போதே கையில் ஆரத்தியுடன் வந்த பார்வதி, இருவருக்கும் சேர்த்து ஆரத்திசுற்றி வாசலில் தட்டிவிட்டுவருவதற்குள் வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருந்தவர்களிடம் வந்தாள் பார்வதி

தன் அப்பாவை பார்த்தவுடன் தன் கையை உருவியபடி அவரிடம் போகப்போனவளின் கையை போக விடாமல் பற்றியபடி சோபாவில் ழையாவுடன் அமர்ந்த மஹிந்தன், பார்வதி உள்ளே வந்ததும் அவள் கையை பற்றி எழுப்பி ஈஸ்வரனிடம் வந்தவன் “அத்தை நீங்களும் மாமாவும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறினான்.

தன் மகள் வந்தவுடனே அவளை ஆவலாக பார்த்த ஈஸ்வரன் தன் மகளின் முகம் வாட்டமாக இருக்கிறதா? என்றும் அவளின் அருகில் இருக்கும் மஹிந்தனை பார்த்தவுடன் வந்த கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடுவோமோ என்றும், இறுக்கத்துடனேயே மஹிந்தனை பார்த்து வாருங்கள் என கூறும் விதமாக தலையை அசைத்தார்,

தன் மகள் தன்னை பார்த்து ஓர் எட்டு வைத்ததையும் அவள் கையை போகவிடாமல் அழுத்தி பிடித்தபடி இருந்த மஹிந்தனை பார்த்ததும் கோபத்துடன் இருந்தவர் தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கவென்று வந்து காலில் விழுந்ததும் அவருக்கு ஏற்பட்ட கோபம் சற்று தனிந்தது .

பின் மஹிந்தன் “இன்னும் இரண்டு தினங்களில் எங்களின் கல்யாண ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்வதற்கு முறைப்படி உங்களிடம் பேசத்தான் அப்பாவும் அம்மாவும் இங்கு கிளம்பி வந்துகொண்டு இருக்கிறார்கள்” என்று கூறியவன்

“தயக்கத்துடன் என் ழையாவை பற்றி இனி நீங்கள் எதற்கும் கவலைப் படவேண்டாம் ஷி இஸ் மை லைப் ழையாவை கல்யாணம் செய்ய நான் செய்த செயல் உங்களை காயப்படுத்தியதற்கு நான் சாரி கேட்டுக்கிறேன்”, என்று கூறினான்

அவன் இறங்கி பேசவும் ஈஸ்வரனும் தன் மகளின் வாழ்கைகாக இறங்கி பேச ஆரம்பித்தார்.

“இனியாவது என் பெண்ணை சந்தோசமாக் நீங்கள் வைத்திருந்தாலே எங்களுக்குப் போதுமானது” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர்களின் வீட்டு வாசலுக்கு மஹிந்தனின் அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள் .

வந்தவர்களை வாங்க... என்று ஈஸ்வரனும் பார்வதியும் வரவேற்றனர்.

விஸ்வநாதன் பதிலுக்கு இருகரம் கூப்பி அவர்களின் வரவேற்பை ஏற்றுச் சிரித்தமுகமாக வந்தார்.

ஆனால்! சுபத்ரா கண்களால் வீட்டினை அளந்தபடி ஒட்டாத பார்வையோடு ஒப்புக்கு ஓர் தலையசைப்பை அலட்சியத்துடன் கொடுத்தபடி உள்ளே வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

பின் அவர்கள் கொண்டுவந்த பழம், பூ அடங்கிய கூடையை ட்ரைவர் கொண்டுவந்து வைத்ததும் விஸ்வநாதன் கண் அசைவில் தன் மனைவியை எழுப்பி பார்வதி ஈஸ்வரன் இருவரிடமும் அதை கொடுத்தனர் .

அப்பொழுது விஸ்வநாதன் “உங்கள் பெண் கவிழையா இப்பொழுது எங்க வீட்டு மருமகள் ,இந்த கல்யாணம் நம்முன் நடக்காவிட்டாலும், நடந்ததை மறந்து இருவரின் எதிர்காலத்தை முன்னிட்டு ஏற்றுக்கொள்வதுதான், நம்ம பிள்ளைகளுக்கு நாம் செய்யும் நன்மை.

மேலும், இனி தப்பு யார் பக்கம் என்று பேசி மனங்களை காயப்படுத்துவதற்கு பதில் நிகழ்ந்ததை சரிப்படுத்த என்ன செய்யலாம்னு பார்ப்போம்.” என்றார் .

அவர் பேசியதும் ஈஸ்வரன், “உட்கார்ந்து மீதத்தை பேசலாம் சம்மந்தி” என்று தன்னுடைய ஒத்துழைப்பை சம்மந்தி என்ற வார்த்தையின் மூலம் சொன்னவர்,

“பெண்பிள்ளையை பெற்றவன் நான். என் மகள் நல்லபடி வாழவேண்டும் அதைத்தவிர எனக்கு வேறென்ன வேண்டும்” என்றார்.

“ஆனால் இனியும் உங்கள் மகன் என்மகளை காயப்படுத்தாமல் இருந்தாலே போதும்” என்று வந்ததும் தன் மகள் தன்னிடம் வரவிடாமல் தடுத்ததை மனதில் வைத்து பேசினார் ஈஸ்வரன் .

அவர் பேசியதும் சுபத்ரா “அதுதான் பெரிய இடமாகபார்த்து வளைத்து கல்யாணத்தை முடிசாச்சே! பிறகு என்ன பிலிம் காட்டிகிட்டு இருக்கிறீர்கள்” என்று கூறிக்கொண்டு போனவள்

சுபத்ரா என்று கோபத்துடன் தன் கையை பிடித்து அழுத்தும் விஸ்வநாதனின் செயலிலும் எதிரில் கண்களில் கோபத்துடன் பார்க்கும் மஹிந்தனின் முறைப்பிலும் “பிலிம் காட்டினால் உங்கள் மகள் பயந்துவிடுவாள் என்று சொல்லவந்தேன்” என்று பேச்சை மாற்றி முடித்தாள் .

பார்வதிக்கு சுபத்ராவின் போக்கு வந்ததில் இருந்தே கவலை படுத்துவதாக இருந்தது,

மேலும் வருண் ஏற்கனவே இதற்கு முன் சுபத்ராவை மஹிந்தன் வீட்டில் பார்க்கும் போது நடந்த கலோபரங்களை கூறியிருந்தான் எனவேதான் அவள் மஹிந்தனை அவளின் அம்மா, அப்பாவரும் முன் தன் வீட்டிற்கு வரும்படி கூறியிருந்தாள் .

மேலும் ஏற்கனவே தன் மகளுக்கு சப்போர்ட்டாக மஹிந்தன் பேசியிருக்கிறான் என்று கேள்விப்பட்டது அவளுக்கு ஆறுதலாக இருந்த போதிலும் அவன் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவனின் அம்மா பிரச்சனை செய்வாளோ?, என்று எண்ணினாள்.

இதுவரை எப்படியோ, இனி இரு குடும்பங்களுக்கு இடையில் சுமூகமான உறவை மேற்கொண்டால்தான் தன் மகளின் பக்கம் தாம் ஆதரவாக் இருக்கமுடியும் என்று அடக்கி வாசிக்க நினைத்திருந்தாள்.

எனினும் மஹிந்தனின் அம்மாவின் பேச்சு அவளுக்கு சுர்.... என்று கோபத்தை கிளறியது. “வலைவிரித்து என்மகளை பிடித்தது உங்கள் மகன்” என்று சிரித்தபடி சொன்னவள் பேச்சை திசைதிருப்பும் படி, “எல்லோரும் சாப்பிடலாமா?” என்று கேட்டாள் .

அதற்கு விஸ்வநாதன் “இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறோம் தங்கச்சி. நீங்கள் என் மகன் செய்த கலோபரங்களை மனதில் வைத்து பிரச்சனை செய்யாமல் உங்கள் மகளை என் வீட்டிற்கு மருமகளாக அனுப்ப ஒத்துக்கொண்டதே எங்களுக்கு பெரிய சந்தோசம்” என்று கூறினார்.

உடனே பார்வதி முதல்முதலாக வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், பழச்சாறாவது குடியுங்கள் என்று அதை எடுக்கச்சென்றார்.

அப்போது, “இன்னும் இரண்டு நாள் கழித்து வரும் வெள்ளிகிழமை நம் பிள்ளைகளின் கல்யாண ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்”.

“உங்களிடம் தேதி முடிவு செய்வதற்கு முன் கலந்து ஆலோசிக்கும் படியான சூழல் இல்லாததாலும் உடனே ரிசப்சன் வைக்கவில்லையெனில் வீண் வதந்திகள் எழும்பும். எனவே, அவசரமாக ஏற்பாடு செய்யும் படியாகிவிட்டது.

உங்கள் சார்பிலும் ஆட்களுக்கு அழைப்பு விட்டு விடுங்கள். ரிசப்சனை எங்களின் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறிக்கொண்டு இருக்கும் போது பார்வதி பழச்சாறு கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்தார்.

அவர்கள் இருவரும் விடைபெறும் போது “மதியம் நம் வீட்டிற்கு வந்துவிடுங்கள் மஹி. உன் தங்கை உங்களுக்குகாக வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து காத்திருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் பார்வதி டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டே, வருண், “மாமாவையும் அக்காவையும் சாப்பிட வரச் சொல்” என்று கூறிவிட்டு சாப்பாட்டு மேஜையில் பரிமாரறுவதற்கு ஆயத்தமானாள்

வந்ததிலிருந்து ழையாவின் கையைப்பிடித்தபடியே உட்கார்ந்திருந்த மஹிந்தனின் முன் இருந்த தட்டில் பதார்த்தங்கள் குறைவாக இருப்பதை பார்த்த பார்வதி

கவி மாப்பிள்ளை தட்டில் வேண்டியதை கேட்டு வச்சுட்டு நீ சாப்பிடு இன்னும் விளையாடுபிள்ளயாவே இருக்காதே என்றாள்

கவிழையா, பார்வதி சொல்வதற்கு முன் சுவாதீனமாக அவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவள், அதன் பின் வேண்டுமென்றே அவனுடைய தட்டில் காலியானவற்றை கவனித்தும் கவனியாதது போலவே இருந்தாள்.

ஆனால் பார்வதி, தன் மகளை அவ்வாறு கண்டுகொள்ளாமல் இருக்க விடாமல் அவனுக்கு வேண்டியதை கவனித்து, கவியிடம் பாத்திரத்தை நகர்த்தி, எடுத்து வைக்குமாறு ஏவிக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமாட்டாமல், பொங்கிவிட்டாள். ழையா, “அம்மா....!” என்று கோபத்துடன் கூறியவள், “முதலில் என்னை சாப்பிட விடுங்க” என்று கூறினாள்

அவள் அவ்வாறு கூறியதும் “பார்வதி, பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மாப்பிள்ளைக்கு பார்த்துப் பரிமாறாமல் இது என்னப் பேச்சு கவி.

நான் எல்லாம் உன் அப்பாவிற்கு பரிமாறிட்டுத்தான் சாப்பிடுவேன். இனி நீயும் உன் வீட்டில் ஆயிரம் வேலையாள் இருந்தாலும் மாப்பிள்ளைக்கு வேண்டியதை பக்கத்தில் இருந்து உன் கையாலேயே பரிமாறிவிட்டுத்தான் சாப்பிடணும்” என்று கூறிவிட்டு,

மஹிந்தனிடம், “கவி பொறுப்பான பொண்ணு தான்...” என்றும் மேலும் விளக்கம் சொல்ல முயன்ற பார்வதியை தடுத்து மஹிந்தன் “அத்தை இதெல்லாம் பிரச்சனையே இல்லை. என் ழையாவைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று சிரித்தபடி கூறினான்.

பின் வருணிடம், உன் வீட்டிற்கு வந்தால் என்னிடம் சில ரகசியம் சொல்வதாய் சொன்னாயே “சாப்பிட்டதும் நாம் தனியே போய் பேசலாமா?”

என்று வேண்டுமென்றே வருணுடன் தன்னை கூட்டுச் சேர்த்து கவிழையாவை தனிமைப்படுத்தி காண்பிக்குமாறு சீண்டும் விதமாக கூறினான்.

வருணுக்கு அவன் தன் அக்காவிடம் வம்பிழுக்க முயல்வதை புரிந்து தானும் அவனுடன் சேர்வதில் குஷியான வருண், “ஓகே! மாமா.... உங்கள் கிட்ட உட்கார்ந்திருக்கும் குட்டக்கத்திரிக்காவை கழட்டிவிட்டுட்டு வாங்க பேசலாம்” என்று கூறினான்.

மஹிந்தனின் முன் எப்பொழுதும் வருண் கூப்பிடும், ‘’குட்டக் கத்திரிக்கா’’ என்ற வார்த்தையை சொன்னவுடன் ழையா கடுப்பானாள்.

அவள் வருணை பார்த்து “டேய் ஒட்டடக் குச்சி நீ என்னை விட வளர்ந்துட்டதால என்னை குட்டக்கத்தரிக்காய் என்று சொன்னா எனக்கு பொல்லாத கோபம் வந்துடும் சொல்லிட்டேன்,

அது என்ன இன்னைக்கு வந்த உன் மாமா கூட ரகசியம் பேசுறது! ஒட்டடக் குச்சி அப்படி எதுவும் பேசின பிச்சு புடுவேன் பிச்சு” என்று கூறினாள்.

ஈஸ்வரனுக்கும் பார்வதிக்கும் மஹிந்தன் வருணிடம் நட்பாக பேசிய விதமும், கவியை என் ழையா என்று சப்போர்ட் செய்து தங்களிடம் கூட விட்டுக்கொடுக்காமல் பேசும் பாங்கும் கண்டபிறகு நிம்மதி பெறுமூச்சு கிளம்பியது .

---தொடரும்---
 
Back
Top