Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,451
79.தேன்சிட்டுகள்
புத்தம் புதிதாக இம்மண்ணில் பிறக்கும் பச்சிளம்குழந்தை என்ன செய்யும். மாய கண்ணனாக இருந்தால், சிறை கூடத்தை திறக்க வைத்து, தந்தை தலையில் சவாரி செய்து, யமுனையாற்றை கடந்து ஆயர்பாடி சென்றிருக்கும். இங்கு பாண்டிக் குடும்பத்தில் பச்சிளம் குழந்தையாக பிறந்த வரகுணன், இம் மண்ணுக்கு வந்த சில மணிப் பொழுதில், பெரியப்பா மகள் அக்காவின் மடியில் கண் மூடி படுத்திருந்த போதும், பிள்ளை சுகம் என்னவென்பதை உணர்த்தி அவள் மனக் கண்ணை திறந்திருந்தான்.
முன்னதாக, ஹரிணி சன்னு படுத்திருந்த அறைக்கு வர, பால் குடித்து வயிறு நிறைந்து படுத்திருந்த சிசு, மந்தகாச புன்னகை புரிந்தது.
“ ஸோ ஸ்வீட், பின்னி குட்டிபையன் சிரிக்கிறான்” என ஹரிணி,தன்னை மறந்து குதூகலிக்க, சன்னு சிரித்துக் கொண்டாள்.
“ அக்கா, பொண்ணு பெத்து தருவேண்டு தான்” என்றார் செல்வி. அதற்குள் மலர் மூலமாக விசயம் பரவி இருந்தது.
“ அவனுக்கு இல்லாததா” என வைத்த கண்வாங்காமல் கொஞ்சி மகிழ்ந்தாள். உதயனுக்கும், தினேஷுக்குமான சம்பிரதாய பேச்சுக்கள், வாழ்த்துக்கள் பரிமாறி கொள்ளப் பட்டன.
தம்பி மகனை பார்க்க, ஐஷு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, கணவன் ஹரீஷ் விருமாண்டியோடு வந்து சேர்ந்தாள்.
“ கன்கிராட்ஸ் தினு, கன்கிராட்ஸ் சன்னு” என வாழ்த்தியவள், “கேர்ள் பேபியா இருக்கும்னு நினைச்சேன். மிஸ் ஆகிடுச்சே” என வருந்த,
“ எங்க கோட்டா, இரண்டு முடிஞ்சிடுச்சு. நீ பெத்துக் கொடு” என்றான் தினேஷ், அக்காவிடம்.
“ சான்ஸ் இருந்தா, ட்ரை பண்ணி இருக்க மாட்டமா.” என மருத்துவன் மந்தகாச புன்னகை புரிய,
“ ஆமாம் போங்க, நீங்க தான் ஸ்டிரிக்ட்டா நோ சொன்னீங்க”என குறைப்பட்ட ஐஸ்வர்யா, ஹரிணியோடு சேர்ந்து மருமகனை கொஞ்சி, இருவருமாக குழந்தை யார் சாயலில் உள்ளது என குறைந்த பட்ச ஆறு வித்தியாசங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
“ நீங்க ஏன் செக்ண்ட் பேபி போகலை” உதயன், ஹரீஷ் விருமாண்டியை கேட்க,
“ எங்க அக்கா மேல அம்புட்டு லவ்வு” என்றான் தினேஷ். மாமன், மச்சினன் உறவில் இத்தனை மாற்றம் வந்திருந்தது.
“ செக்ண்ட் பேபி பெத்துக்கிட்டா தான் லவ் அதிகம்னு ஊர் உலகம் சொல்லும். நீ மாத்தி சொல்ற” என்ற மருத்துவன், மருமகனனான உதயனிடம்,
“ இஷுவுக்கு , அஷு பிறந்திதிலேயே கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் இருந்தது. அஸ் எ டாக்டரா, தெரிஞ்சே அவளை கஷ்ட படுத்த விரும்பலை. அவ்வளவு தான் “ எனவும், உதயன், ஹரிணி குறித்து அவனிடம் தனித்து பேச வேண்டும் என முடிவெடுத்தான்.
ஹரீஷ், சன்னுவை, “ வெல்ட்ன் சன்னு. யூ ஸ்டரகில்ஸ் மோர் தன் டென் அவர்ஸ். லாஸ்ட் மினிட் வரை தைரியமா இருந்தியே, ஹாட்ஸ் ஆஃப் டூ யூ” என்று பாராட்ட,
“ நீங்களும், மீனாவும் இருக்க தைரியம் தான் அண்ணா” என நன்றி நவிழ்ந்தாள்.
“ நாங்க எங்க டூட்டிய செய்யிறோம்மா” என மருத்துவனாக கேஸ் சீட்டை பார்க்க, செவிலியர் ஒருவர் வந்து அவன் கேட்கும் கேள்விவிகளுக்கு பதில் தந்தார்.
“ செயில்ட் ஸ்பஷலிஸ்டு இன்பார்ம் பண்ணிடுங்க. ஐ வான்ட் ஃபுல் ரிபோர்ட்” என மருத்துவ பாஷை பேச,
“ யெஸ் டாக்டர் “ என பதில் தந்துக் கொண்டிருந்தார்.
ஐஷு மருமகனை தூக்கப் போக, “ இஷு, கையை ஸானிடைஸ் பண்ணிட்டு பேபியை தூக்கு. “ என கண்டித்தான்.
“ கார்லருந்து இறங்கும் போதே சானிடைஸ் பண்ணிட்டேன்” என்றவள்,
“ ரொம்ப நாள் ஆச்சா, பேபியை தூக்கவே பயமா இருக்கு. மம்மி ஜுனியரை தூக்கி கொடு” என மற்றொரு கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து, மருமகனை வாங்கிக் கொள்ள, ஹரிணியும் வந்து ஐஸுவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
ஹரீஷ், “ அத்தை ரூம்ல கூட்டம் சேர்க்காத. சன்னுவுக்கும், பேபிக்கும் ரெஸ்ட் அவசியம். அடுத்த ரூம் உங்களுக்கு தான் அலார்ட் பண்ணியிருக்கு, அங்க போயி ஊர்கதையை பேசுங்க” என செல்வியிடம் கண்டித்துச் சொல்ல,
“ டாக்டர் ஐயா உத்தரவு” என பவ்யமாக சொல்ல, “ தட்ஸ் குட்” அவனும் அசராமல் பதில் சொல்லி செல்ல,
உதயன், “ டாக்டர் உங்களோட பேசனும்” என்றான்.
“ கேபினுக்கு போகலாம் வாங்க” என அழைக்க,
ஹரிணி,” நானும் வரவா” என எழ,
“ நீ இரு. ஆர்த்தோ டாக்டர் வரவும் வந்து கூட்டிட்டு போறேன்” என உதயன், ஹரீஷோடு நடந்தான்.
அவர்கள் செல்லவும், “ ஐஷு, கூடிய சீக்கிரத்தில நீ அப்பத்தா ஆகப் போறடி” என செல்வி சொல்ல,
“ என்னம்மா உளர்ற, இவருக்கு நான் அத்தை தானே” எனறாள்.
“ இவருக்கு அத்தை தான்.உன் அண்ணன் மக உன்னை அப்பத்தா ஆக்கப் போறா” என ஹரிணியை பார்த்துக் கொண்டே செல்வி சொல்ல,
“ வாட்” என ஹரிணியை பார்த்து,
“ இது எப்ப” என அதிர்ச்சியாக கேட்டாள்.
“ இப்பத் தான் மீனாக்கா செக்கப் பண்ணுச்சு” என விவரம் சொன்னாள் ஹரிணி.
“ உன் மருமகளுக்கு, புள்ளை எப்படி பெத்துக்க போறோமுண்டு விசனம். நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லு ஐஷு” என்ற படி மலர் உள்ளே வர,
“ நீங்க டிகிரி கூட முடிக்க விடாமல் கல்யாணம் பண்ணி வச்சா, அவ விசனப்படாம என்ன பண்ணுவா” என அண்ணன் மகளுக்கு சப்போர்ட் செய்த ஜஷு, அதன் பின் அறிவுரையும் செய்தாள்.
சன்னு, “ஹரிணி கொஞ்சம் சிரமம் இருக்கத் தான் செய்யும். அட் லாஸ்ட் பேபியை கையில வாங்கும் போது, எல்லா வலியும் மறந்திடும். ப்ளஸண்ட் மூமண்ட்.” தன் அனுபவத்தைச் சொல்ல,
“ உனக்குன்னே சன்னு பின்னி பையன் பெத்திருக்கு . நீ தூக்கி பாரு” என ஐஸ்வர்யாவும் உற்சாகப் படுத்த,
“ நானா” என ஹரிணி தயங்கினாள்.
“ ஹரிணி, இப்படி உட்காரு. உன் தம்பியை மடியில வைக்கிறேன்” என செல்வி சொல்ல,
“ நான், தூக்கிடுவேனா அப்பத்தா” என சந்தேகப் பட,
“ அம்மாவாகப் போற, இதெல்லாம் பழகிக்க வேண்டியது தான் “ என அவளை மற்றொரு கட்டிலில் அமர்த்தி, ஹரிணியின் மடியில் வைத்து செல்வி பிடித்துக் கொள்ள, தன் மடியில் ஏந்தி அணைத்து வைத்துக் கொண்ட ஹரிணிக்கும் ஆனந்தம். தான் கர்ப்பமுற்றிருப்பதை பற்றிய தயக்கங்களும், பயமும் சற்றே விலகியது.
அடுத்தடுத்து பாண்டி குடும்ப ஆட்கள் பார்க்க வர, உதயன் ஹரிணியை ஆர்த்தோ மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றான். மனைவி முகத்தில் தெளிவைக் கண்ட போதும், அவனுக்கு சற்று கலக்கம் தான் .
“ ஹனிமா, பேபி கேரி பண்ணுடுவியா” தனிமையில் இருக்கும் போது கேட்க,
“ இட்ஸ் ஓகே உதி. குட்டி தம்பி மாதிரி ஒரு பேபி தானே உள்ளே இருக்கும். எனக்கு பிடிச்சிருக்கு” என்று விட்டாள். இரண்டு மூன்று முறை வேறு வேறு கேள்விகள் கேட்டு உதயன் அவள் முடிவை உறுதிப் படுத்திக் கொண்டான்.
துவரிமானிலிருந்து மருது, சுமி, ராஜன், கௌசியும், மணிகுயில் இல்லத்திலிருந்து பூங்குயில் மதியத்துக்கான பத்திய சாப்பாட்டோடும் வந்து சேர்ந்தனர்.
“ நீ ஏன் பூவு சிரமப் படுற, சரோஜா சமைச்சு அனுப்புறேண்டு சொல்லுச்சு” என பக்கத்து அறையிலிருந்து வந்த நிர்மலா கேட்க,
“ மதிய சாப்பாடு நான் கொண்டு போறேண்டு, ரங்கம் சித்தப்பாட்ட சொல்லி விட்டுட்டேன். அவுங்க நைட்டுக்கு வரட்டும்” என குழந்தையை கொஞ்சியவள், சன்னுவின் உடல் நலத்தையும் விசாரித்தாள்.
பாண்டி குடும்பம் வர போக இருப்பார்கள், அவர்களை கட்டுபடுத்துவது சிரமம் என்பதற்காகவே பக்கத்தில் ஒரு அறையையும் ஒதுக்கி இருந்தனர். இரவு முழுதும் விழித்திருந்த நிர்மலா , செல்வி வரவும், அடுத்த அறைக்கு சென்று ஓய்வெடுத்து விட்டே வந்திருந்தார்.
அடுத்தடுத்து ஆட்கள் வர, சன்னுவின் அறையில் ஒரிருவரை மட்டுமே அனுமதித்தனர். ஆண்கள் ஒரு முறை வந்து பார்த்து விட்டு, அலுவலறைக்கு சென்று பேசிக் கொண்டு இருந்தனர்.
செல்லபாண்டியும், மலரும் மகிழ்ச்சியோடு மகள் கருவுற்றிருப்பதை மருது, சுமியிடம் சொல்ல,
“ வாழ்த்துக்கள் அண்ணேன்.இனி ஜமீன் வீட்டு ஆளுங்க ஒன்னு பேச முடியாது” மருது மகிழ, “ ரொம்ப சந்தோஷம் அக்கா” என்றாள் சுமி.
“ கட்டாய கல்யாணம் செஞ்சு வைக்கிறோமே, ஹரிணி முரண்டு பிடிப்பாளேண்டு பயந்துக்கே இருந்தேன் சுமி. பரவாயில்லை. சும்மா சொல்லக் கூடாது மாப்பிள்ளையும் தங்கம். எம்புட்டு சாமர்த்தியமா இவளை சமாளிச்சு இருக்காரு. எப்படி தாங்குறாரு. ஹரிணி பிள்ளை பெத்துடுவாளாண்டு அம்புட்டு விசனப்படுறாரு” என மாப்பிள்ளை புகழ் பாடிய மலர்,
“ நல்ல வேளை, சொந்தம், சுருத்துண்டு கருமாத்தூர்ல கொண்டி கொடுக்கலை. அவன் எப்படிண்டும் தெரிஞ்சு போயிடுச்சில்ல. வீம்புக்கு அந்த பிள்ளையை கல்யாணம் பண்ணி, அந்த புள்ளையை தொடாமல் தான் வச்சிருக்கான்” என புரணி பேசினாள்.
“ நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்குன்னா அதோட விடுங்கக்கா. அவுங்களை பத்தி எதுக்கு பேசனும்” என சுமி ஞாயம் பேச,
“ இல்லையிண்டா, எங்க மதினிக்கு திண்ட சோறு செமிக்காதுல்ல” என பூங்குயில் வந்தாள்.
“ இல்லாததையா சொல்லி புட்டேன். போட்டிக்கு கல்யாணம் பண்ணி, அந்த புள்ளையை வாழாமல் தானே வச்சிருக்கான்” என மலர் வழக்காட,
“ வாழாமல் வச்சிருக்காண்டு உங்களுக்குத் தெரியுமா. அவுக பெட்ரூம்பையா எட்டி பார்த்திங்க” பூவு சுறுக்கென கேட்க,
“ எனக்கு எதுக்கு அந்த பொழப்பு. நான் சொல்லலையிண்டாலும், இன்னும் மூணு மாசத்தில உன் துரை சித்தப்பாங்க கேட்பாங்க. அக்காளும், தங்கச்சியும் அப்ப பதில் சொல்லிக்குங்க.” என்றாள்.
“ நாங்க பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆதி சித்ர்வை எப்படி தாங்குறாண்டு ஊருக்கே தெரியும். சித்ராவுக்கு பார்த்து பார்த்து ஒன்னொன்னும் செஞ்சு தாறான்” என பூவு வரிசையாக அடுக்க,
“ உசர உசரமா பறந்தாலும், ஊர் குருவி பருந்து ஆகாது” என்றாள் மலர்.
“ பருந்துக்கு தட்டி பறிக்கத் தான் தெரியும். ஊர் குருவி தான் கூடி வாழும். அந்த அருமையும் உங்களுக்கு ஒரு நாள் கட்டாயம் தெரியும்” என பதில் தந்த பூங்குயில் சன்னு இருந்த அறையை நோக்கிச் சென்றாள்.
“ ஆத்தி, இனி எல்லா பக்கமும் போயி வத்தி வைக்கும். மாமியாருங்க அதுக்கு ஒரு ஆட்டம் ஆடுங்க. நம்மளே மாமியார் ஆனாலும், நம்ம மாமியாருக்கு, மாமியாருக்கு, மாமியாருக்குண்டு அம்புட்டு பேருக்கும் பயந்து சாகத்தான் வேண்டியது இருக்கு. வெளியில பேரு பெத்த பேரு, எம் எல் ஏ பொண்டாட்டிண்டு, குடும்பத்தில சல்லிகாசா தான் இருக்க வேண்டியது இருக்கு. என்ன பொழப்போ” என மலர் சலித்துக் கொள்ள,
“விடுங்கக்கா. நம்ம புள்ளைங்களே நம்ம பேச்சை கேட்காது. கோபம் இருக்க இடத்தில குணம் இருக்குமுண்டு, குடும்பமா கூடி, நமக்கு ஒன்னுன்னா பார்க்கவும் செய்யிறாகல்ல, அதை மட்டும் மனசில வச்சுக்குங்க” என சமாதானம் செய்தாள் சுமித்ரா.
சித்ராவை வீட்டில் இறக்கி விட்டு, ஜல்லிக்கட்டு கட்டுமான இடத்துக்கு வந்த ஆதியின் மனதில், வெளியே சொல்ல இயலாத வெறுமை,ஆற்றாமை இருந்தது.
“ நான் தான் அவளை லவ் பண்ணியிருக்கேன். அவளுக்கு நான் பொழுது போக்கு தான். வீட்டில கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டாய்ங்கண்டு நான் தான் தப்பா நினைச்சிகிட்டேன் போல.” என தன்னைப் போல புலம்பியவன், “ அது எப்புடிடி அதுக்குள்ள புள்ளையை சுமந்துகிட்டு நிக்கிற. இவ பசப்பி மட்டும் இல்லை, பச்சவூந்தியம் தான். அப்ப அவ காதலிச்சது பொய்யா?” என கேட்க,
“ அவளை ப்ளஸ் பண்ணிடுங்க ஆதி. வாழ்த்திடுங்க , வயித்து பிள்ளையோட இருக்கா” என்ற சித்ராவின் குரலும் கேட்டது.
“புள்ளை வந்துடுச்சு. அதுவாவது அது ஆத்தா மாதிரி இல்லாமல், நல்ல புள்ளையா பிறக்கட்டும்.” என நினைத்தவன்,
தனது கவனத்தை திசை திருப்புவதற்காக கடுமையான வேலையில் இறங்கினான்.
அதே நேரம், பூங்குயிலை பார்த்த ஹரிணியின் மனதில் ஒரு நெருடல். பூங்குயில் ” புத்தியோட பொழைச்சுக்கிட்ட, ரொம்ப சந்தோஷமடி” என வாழ்த்த,
“ தாங்க்ஸ் அத்தை” என தலை குணிந்தாள். காலையில் தான் ஆதி, சித்ராவை திட்டியது நினைவில் வந்தது.
“ ஒரு விதத்தில இது நல்லது தாண்டி. இதுக்கப்பறமாவது, ஆதி, சித்ராவோட வாழ ஆரம்பிக்கட்டும். காதலு, கத்திரிக்காவெல்லாம் சினிமால, நாடகத்தில, கதை புக்குல தான் நல்லா இருக்கும். நிச வாழ்க்கையில இது தான் நிசம்” என உரை நிகழ்த்த,
“ ஆதி மாமா, சித்ரா அக்காவோட குடும்பம் நடத்துற அன்னைக்கு தான் அத்தை, எனக்கும் முழு நிம்மதி” என இரு கண்ணீர் துளிகளை சிதற விட,
“ நடக்கும். அந்த கருப்பன் நடத்தி வைப்பான். நீயும் சூதானமா இரு. இனிமே சின்ன பொண்ணு இல்லை. வயசுக்கு தக்கண, குடும்பத்துக்கு ஏத்த பொம்பளையா உன்னை மாத்திக்க” என அறிவுரைச் சொல்ல,
“ என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தாங்க்ஸ் அத்தை” என்றாள் ஹரிணி.
முன்னதாக ஹரிணியின் செக்கப் முடியவுமே உதயன் கம்பெனிக்கு கிளம்பி விட, அவள் செல்லபாண்டி மலரோடு மானூத்து செல்வதாக ஏற்பாடு.
சன்னுவின் அறையில் அடுத்த மகளிரணி கூடியிருக்க, மலர் ஆதியை பற்றி சொன்ன வார்த்தைகள் பூங்குயிலை வெகுவாகவே தாக்கி இருந்தது.
பக்கத்து அறையில் நிர்மலாவிடம் புலம்பிக் கொண்டு இருக்க,
“ அவ சொன்னா சொல்லிட்டு போறா. மகளை பெரிய இடத்தில கட்டிக் கொடுத்துட்டோம், பிள்ளையாண்டுட்டா இனி அசைக்க முடியாதுண்டு நம்பிக்கை. சொத்தும், செல்வாக்கும் எம்புட்டுக்கு எம்புட்டு அதிகமா இருக்கோ, அம்புட்டுக்கு வன்மமும், பிரச்சினையும் அதிகமா இருக்கும். நான் அனுபவிக்காததா. இந்த புள்ளை ஹரிணி என்னண்டு சமாளிக்குமுண்டு, அதை நினைச்சு, எனக்கு பாவமா தான் இருக்கு. எல்லாம் அவரவர் வாங்கி வர்ற வரம். ஆதியை குறை சொன்னா சொல்லிட்டு போறா. அதுனால அவன் ஒன்னும் குறைஞ்சிட மாட்டான். பெரிய காண்ட்ரேக்ட்ரா டாப்பா வருவான் பாரு. சித்ராவும், ஆதியும் தெளிவா தான் இருக்குதுங்க. காலையிலேயே வந்துட்டு போயிடிச்சுங்க. நீ மனசை போட்டு அலட்டிக்காத” எனவும்
“அப்படிங்கிறீங்க? அதுவும் சரி தான் “ என்றவள்,” நல்ல காலம் உங்ககிட்ட பேசினேன். இல்லையிண்டா எனக்கு இருக்க ஆத்திரத்துக்கு அக்கா கிட்டையும், அம்மாகிட்டையும் சொல்லி இருப்பேன். அது ஒரு பஞ்சாயத்து ஆகியிருக்கும்” என மனதை தேற்றிக் கொண்டாள்.
சுமியும், கௌசியும் , பூங்குயிலிடம் செல்லம்மாளை விசாரித்தனர். அழைத்துச் செல்ல வந்து செல்வமணி முகப்பிலிருந்து போனடிக்க, பூங்குயில் வீட்டுக்கு கிளம்பினாள்.
ஹரிணியும் கிளம்பும் மீண்டும் குட்டி பாண்டியை பார்த்து விட்டு, சொல்லிச் செல்ல வந்தாள். ஆர்த்தோ டாக்டர், பூரண குணமாகி விட்டாள் என சொல்லவுமே ஸ்டிக் கூட தேவைப் படாமல் மெல்ல நடந்து வர, அத்தையும் மருமகளும் வராண்டாவில் சந்தித்து மனம் திறந்து கொண்டனர்.
பூச்குயிலை பார்க்கவுமே மலர், மெடிக்கல் ஷாப்பில் ஏதோ வாங்கும் சாக்கில் சென்று விட ஹரிணியும், பூங்குயிலும் மட்டுமே சந்தித்துக் கொண்டனர்.
செல்லபாண்டியும், மலரும் , இனிப்புகளை வாங்கிக் கொண்டு இந்த நல்ல சேதியைச் சொல்ல , மகளையும் அழைத்துக் கொண்டு பாண்டி இல்லத்துக்குச் செல்ல, பேச்சியம்மாள், சிவபாண்டி ,சந்திரா முதல் எல்லோருக்குமே மகிழ்ச்சி.
“ நான் தான் சொன்னேன்ல” என கொள்ளு பேத்தியை கொஞ்சிய பேச்சியம்மாள் ,” எள்ளு பேரனோ, பேத்தியோ , அதையும் பார்த்திட்டேண்டா என் கட்டை கைலாசம் போயிடும்* என மகிழ்ந்தார்.
“ அதெல்லாம் நூறாயிசுக்கு நீங்க இருப்பீங்க பாட்டி” என்றாள் ஹரிணி.
அசோதை, வீரனுக்குமே மகிழ்ச்சி தான். “நாங்களும், கொள்ளு பேரன் பேத்தியை கொஞ்சுவோம்ல” எனஅசோதை, பேச்சியோடு ஒப்பிட,
“ நான் எள்ளு பேரனை கொஞ்ச போறேண்டி” என்றார் அவர்.
“ எங்க ஆத்தாளை செயிக்க முடியுமா? அது கூட எதுக்கு போட்டி போடுறீங்க” என்ற சிவபாண்டிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.
உசிலம்பட்டி வரை வந்து விட்டு ராஜனும், கௌசியும் மானூத்து வராமலா. பேச்சியம்மாள் காதை அத்து விட மாட்டார்? மதிய உணவுக்கு அவர்களும் மானூத்து வர, சிவப்ரியாவும், பூமாவுமாக எல்லாருக்கும் பரிமாரினர்.
மூத்த பாண்டிகள் மூவரும் கூடியிருக்க, ஹரிணியை தீபாவளி அன்று மாலையில் வளையபட்டி ஜமீன் இல்லம் , அவளின் மாமியார் வீட்டுக்கு அனுப்பலாம் என மகன், மருமகள்களோடு கூடி பேசி முடிவெடுத்தனர்.
மந்திரிக்கும், ஜமீன் வீட்டுக்கும், ஹரிணி கருவுற்றிருக்கும் செய்தி சொல்லப்பட, எல்லோருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அடுத்த பத்து நாளில் தீபாவளி பண்டிகை வந்தது. பாண்டி, துரை இல்லங்கள் பெண் மக்களின் தலைதீபாவளிக்கு தயாராகி கொண்டிருந்தன. பலகாரங்கள் சுடுவது, துணிமணிகள் எடுப்பது என ஒருபுறம் பிசியாக இருக்க, இனிப்பும், பட்டாசும் வந்து குவிந்த வண்ணம் இருந்தது.
சந்திரா, பேத்தியை புகுந்த வீட்டுக்கு அனுப்ப, அவளை மனதளவில் தயார் செய்தார். “அது தான் உதி இங்க வர்றார் ல அப்பத்தா, இப்ப தான் மசக்கை என்னை பாடாய் படுத்துது. இப்ப போயி அனுப்பி வைக்கிறிங்க” என குறை பட,
“அதுக்குண்டு புகுந்த வீட்டுக்கு போகாமல் இருப்பியா, நாலு மாசம் அங்குட்டு போயி இருந்து, அவுக கிட்டையும் நல்ல பெரு எடுத்துட்டு வா. இப்ப மூணாம் மாசம் முடிய போகுது, ஏழாம் மாசம் ஆரம்பிக்கவும் வளைகாப்பு போட்டு கூடியந்துடுறேன். அப்புறம் ஆறு மாசம் இங்க தானே” அவர் நயந்து பேச, சரி என மண்டையை ஆட்டிக் கொண்டாள்.
தீபாவளி திருநாளுக்காக ஊரே அல்லோகலப் பட, சித்திரை நிலா மட்டும், அல்லும், பகலும் அயராது தன்னுடைய சிஏ பாடத்தை படித்தாள். தீபாவளிக்கு அடுத்த இரு தினங்களில் அவளின் பரீட்சை ஆரம்பிக்க இருந்தது.
மனைவியை தொல்லை செய்ய கூடாது என ஆதி, அம்மாவுக்கு ஆர்டர் போட்டு விட, சித்ரா சாப்பிட மட்டுமே கீழே இறங்கினாள். இரவு உணவை மட்டும் இருவருமாக சேர்ந்து சாப்பிடுவார்கள். அன்றைய நிகழ்வுகளை அவன் அடுக்க, அவளும் ஆசையாகவே கேட்பாள்.
கண்மாய்கரையில் சித்ராவிடம் மனம் திறந்து போதும், அடுத்து வந்த நாட்களில் அவளை எவ்விதத்திலும் தூண்டி விடாமல், அவள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொண்டான்.
தீபாவளி கொண்டாட்டத்தில் சந்திப்போம்.