My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 29....

IVNP18

Member
Joined
Mar 21, 2025
Messages
58
மறு நாள் திட்டமிட்ட படி கோமதியும் முத்துக்குமாரியும் கூடவே அரிஹந்தும் வைஷாலி நகரம் கிளம்பினார்கள். அரிஹந்த் தன் கண்களால் கலாவைத் தேடிய போது அவளது கண்கள் அதற்கு பதில் சொல்லவில்லை. கலாவின் கண்களைப் பார்த்த அரிஹந்துக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரிப்போட்டது. காரணம் அவளது கண்களில் முன்பு இருந்த கனிவு, அன்பு எதுவுமே இல்லை. அதற்காக கோபமோ சோகமோ இருந்தது என்று கூட இல்லை. இரு பனிக்கட்டித் துண்டுகள் போல எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத கண்கள் அவை. இப்படிப்பட்ட கண்கள் மிகவும் ஆபத்தானவை என்று தோன்ற பார்வையைத் திருப்பிக் கொண்டான். கலாவின் உதட்டில் கசப்பான புன்னகை. கையில் சில துணிப் பொட்டலங்களோடு வந்தாள் சுவர்ணா. ஒரு விநாடிக்கும் குறைவான நேரம் கலாவின் கண்களும் சுவர்ணாவின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

"பொருள் கேட்டுப் போகிறோம்! கொடுத்தால் எதில் வைத்து எடுத்து வருவீர்கள்? இதில் உணவும் உள்ளது. உணவு காலியான பிறகு இதனைத் துவைத்து பை போலப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்." என்றாள் சுவர்ணா பொட்டலங்களை நீட்டியவாறே.

கோமதிக்கு சற்றே வியப்பாக இருந்தது. வைஷாலி இங்கிருந்து அரை நாள் தூரம் தான். அதிகாலையில் கிளம்பி விட்டால் மதியத்துக்குள் போய் விடலாம். ஆம்ரபாலி வழிப்போக்கர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம் என்பதால் உணவுக் கவலையே இல்லையே? என்று எண்ணிக் கொண்டாள். இருந்தும் மகள் ஆசையாகக் கொடுத்திருக்கிறாள் என்று வாங்கிக் கொண்டாள்.

"சுவர்ணா உணவு கொடுத்தாய் சரி! ஆனால் பாதுகாப்பு கொடுக்கவில்லையே?" என்றாள் கலா.

மற்றவர்கள் அவளைப் பார்த்தனர். விளக்கம் அளித்தாள் கலா.

ஆம்ரபாலி மற்றும் விமலா என்ற மிகப்பெரிய செல்வந்தர்களான நல்ல பெண்களிடத்தில் பெண்ணடிமை முறையைத் தடுக்க பணம் கேட்டுப் போகிறார்கள். நிச்சயம் பெரும் பொருள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் வைஷாலியிலிருந்து திரும்பி வரும் வழியில் கள்வர் பயம் மிக அதிகம். அத்தனை பொருளையும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டால் மீண்டும் சென்று கேட்க முடியாது என்பதால் பாதுகாப்புக்கு மாரிச்சாமியையும் அழைத்துச் செல்லுமாறு கூறினாள் கலா. அதற்கு சுவர்ணாவும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று கூறினாள். அரிஹந்துக்கு என்னவோ நடக்கிறது என்று புரிந்தது ஆனால் என்ன என்று சொல்லத் தெரியவில்லை. முத்துக்குமாரி போர்ப்பயிற்சியில் வல்லவள் தான் ஆனால் நிறைய பேர் வந்து விட்டால் இன்னொரு ஆள் துணைக்கு இருப்பது அவசியம் அதனால் மாரிச்சாமியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கூறினாள் கலா. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகப் பட்டதால் அவர்களுடனே மாரிச்சாமியும் கிளம்பினார். சற்று தொலைவில் உள்ள காட்டுவாசிகளின் வீடுகளில் சென்று தங்கிக் கொள்ளுங்கள். நாளை அல்லது நாளை மறு நாள் சந்திப்போம் என்று சுவர்ணாவிடமும், கலாவிடமும் கூறி விடை பெற்றனர் கோமதியும் மற்றவர்களும். அரிஹந்த் சந்தேகம் தோன்ற திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்.

அவர்கள் சென்றதும் தங்களது உடைகளை அவசர அவசரமாக மூட்டையாகக் கட்டினார்கள் சுவர்ணாவும், கலாவும். அதைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தான் உத்திரன்.

கோமதிக்கும் மனதில் ஏதோ உறுத்தியது. சுவர்ணாவின் முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளுமே இல்லை. அவள் முகம் கண்ணாடி போன்றது. மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே முகத்தில் காட்டி விடுவாள் சுவர்ணா. ஆனால் இப்போது அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டே பிடிக்க்க முடியவில்லை. இந்த சுவர்ணாவைப் பார்த்து தன்னையும் அறியாத பயம் உருவாவதை தடுக்க முடியவில்லை கோமதியால். இது ஒரு போர்க்களம். வெற்றி யார் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். எங்கள் பக்கம் வெற்றி என்றால் பாரதத்தில் தாய் வழி சமூகமும், பெண்ணடிமையும் இருக்காது. ஆனால் ஒரு வேளை நாங்கள் தோற்று விட்டால் பெண்கள் ஒதுக்கப்படுவார்கள், தவறே செய்யாமல் தண்டிக்கப்படுவார்கள், குழந்தை பெறும் இயந்திரமாக மாற்றப்படுவார்கள், தங்கம், வைரம் போன்ற விலை அதிகம் உள்ள உயிரற்ற பொருள்களோடு ஒப்பிடப்பட்டு திருடு போய் போய் விடும், சமூகத்தில் கெட்டவர்கள் அதிகம் என்று சொல்லி பூட்டி வைக்கப்படுவார்கள். ஆண்களுக்கு பெண்கள் மதிக்கப்பட வேண்டிய ஒரு சக மனுஷி என்று கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக ஒரு சொத்து போல உரிமை கொண்டாட கற்றுக்கொடுக்கப்படும். அப்படி மட்டும் நடந்தால் பெண்களுக்கு அதை விடக் கேவலமான விஷயம் எதுவும் இல்லை. இப்போதே பெண்களையே பெண்களுக்கு எதிராகத் தூண்டி விடும் பணி தொடங்கி விட்டது. பல பெண்களும் விவரம் தெரியாமல் கணவன்/தந்தை/சகோதரன் இவர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற விருப்பப் பட்டு அவர்களுக்கு பிடித்த மாதிரி சமையற்கட்டே கதி என்று வாழ்வதோடு அப்படி வாழாத பெண்களைப் பற்றி தவறாகப் பேசவும் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது பெண்ணினம் தான் என்பது தெரியவில்லையே? இப்படி ஏதோ எண்ணிக் கொண்டு நடந்தாலும் சுவர்ணாவின் மாற்றத்தில் மீண்டும் வந்து நின்றது கோமதியின் மனம். அவளது புத்திசாலித்தனத்திலோ, அறிவுக்கூர்மையிலோ கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை கோமதிக்கு. ஆனால் மயூரன் துரோகியாக மாறி விட்டான் என்பதற்காக தன் வாழ்வு முடிந்து விட்டது என்று அவள் நினைக்கக் கூடாது. சிறு குழந்தை அவள். இன்னமும் கடல் அளவு காலம் வாழ வேண்டும். தக்க துணையோடு வாழ்ந்தால் எளிதாகக் கடக்கலாம். பார்க்கலாம்! சுவர்ணாவின் மனக்காயத்தைக் காலம் தான் ஆற்ற வேண்டும் என்று எண்ணியபடியே பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த மகனைப் பார்த்தாள் கோமதி.

அவள் மனதில் பாசம் சுரந்தது. எப்பேர்ப்பட்ட மகனைப் பெற்றிருக்கிறேன்? நாங்கள் பெண்கள். இயல்பாகவே எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம். ஆனால் அரிஹந்த் ஒரு ஆணாக இருந்தும் எங்களோடு கை கோர்த்திருக்கிறானே? இவனுக்கும் கலாவுக்கும் இடையே காதல் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது கலாவும் அல்லவா வேறு மாதிரி இருக்கிறாள்? சுவர்ணா போல குழந்தைத்தனமான முகம் அல்ல கலாவுடையது என்றாலும் வயதுக்கேற்ற அப்பாவித்தனம் தெரிந்ததே? இப்போது இருவர் முகங்களிலும் ஒரே நாளில் 20 வயது கூடினாற் போல ஒரு முதிர்ச்சி தெரிகிறதே? பாவம் அரிஹந்த்! அவனுக்கும் மனதில் எத்தனையோ உள்ளது. ஆனாலும் சொல்லாமல் சமாளிக்கிறான். தாயே சக்தி! இது என்ன சோதனையான காலம் அம்மா? எப்போது முடியும்? எப்படி முடியும்? பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ள ஒரு காலத்தை நாங்கள் கடந்து கொண்டிருக்கிறோம். ஹரன் முதல் பலியாக ஆகி விட்டான். இனியும் எத்தனை உயிர்கள் போகும் அம்மா? அந்த மநுவும் கண்வாவும் போட்ட சதி நிறைவேறியது என்றால் பல நல்ல உயிர்கள் போய் விடுமே? என்று யோசித்துக் கொண்டே வந்தாள் கோமதி.

அரிஹந்த் முகத்திலும் பல உணர்ச்சிகள் பிரதிபலித்தன. அவனது மனம் அமைதியை மிகவும் விரும்பியது. சஞ்சலமே இல்லாமல், பொய், ஏமாற்று, பொறாமை, வஞ்சகம் இவை எதுவும் இல்லாத உலகத்தை உன்னால் படைக்க முடியவில்லையா ஆண்டவனே! ஒருவேளை நீ படைத்த அந்த நல்ல உலகத்தை மனிதர்கள் இப்படி மாற்றி விட்டார்களா? அப்படித்தான் இருக்கும். பறவைகள் வானத்தை இது என் இடம், மற்ற பறவைகள் பறக்கக் கூடாது என்று தடை சொல்வதில்லை, விலங்குகளும் தங்கள் இனத்தோடு மற்ற இனங்களும் சேர்ந்து வாழ்கின்றன. வேட்டையாடும் மிருகங்களான சிங்கம்,. புலி சிறுத்தை போன்றவை கூட உணவுக்காக அன்றி பெருமைக்காக பிற உயிர்களைக் கொல்வதில்லை. ஆனால் மனிதன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்? கடவுள் படைத்த உலகம் மனிதன் படைத்த பணத்தால் மொத்தமாக மாறி விட்டது. அறிவும் நாகரீகமும் வளர வளர, உயர்வாக எழ வேண்டிய மனிதன், சுயநலம், பேராசை, வஞ்சகம் என்று தீயவைகளின் மொத்த உருவமாக மாறி விட்டான். அதனால் தான் பகவான் புத்தர் ஆசையைத் துறக்க வேண்டும் என்கிறார் போல. உண்மை தான். இந்த உலகத்தில் துறக்கவே முடியாத ஒன்றே ஒன்று உண்டென்றால் அது ஆசை தான். எனக்கு இன்னமும் சொத்து வேண்டும், இவன் மனைவியை விட அழகான மனைவி வேண்டும், பக்கத்து வீட்டை விடப் பெரிய வீடு வேண்டும். இப்படி ஆசைகள் நீண்டு கொண்டே போகின்றன. இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடே இல்லை. ஆனால் பெண்கள் மட்டும் தான் ஆசைப்படுவது போல பேசுகிறார்கள். கழுத்தில் கற்கள் பதித்த பதக்கம் தொங்கும் சங்கிலி, விரல் முழுக்க மோதிரங்கள் என்று போட்டுக்கொள்ளும் ஆண்கள் எவ்வளவு பேர்? ஆனால் நகை என்றால் பெண்கள் தான் ஆசைப்படுவார்கள் என்று பெண்களையே மூளைச் சலவை செய்து விட்டார்கள்.

மனிதத் தொகையில் பாதி அவர்கள். ஒரு பாதியை அடிமை செய்து விட்டால், மூளையே இல்லாத, சுயமாக சிந்திக்கும் தன்மையை இழந்த பெண்கள் பெறும் குழந்தைகள் எப்படி அறிவாளிகளாக? ஞானத்தேடல் உள்ளவர்களாக இருப்பார்கள்? பாரத நாட்டில் இத்தனை காவியங்களும், வானியலும் அறிவியலும் சிறந்து விளங்குவதன் காரணமே பெண் அடிமைப் படுத்தப்படவில்லை என்பதால் தான். பண் பட்ட நிலத்தில் தான் சிறந்த பயிர்கள் விளையும். வறட்டு நிலத்தில் எத்தனை வீரியமிக்க விதை போட்டாலும் அது சரியான வளர்ச்சி உடையதாக ஆகாது. பெண்களுக்கு அறிவும், ஞானமும் மிக மிக அவசியம். அவர்களால் தான் நல்ல சமூகத்தை, போர்களற்ற சமூகத்தை உருவாக்க முடியும். உயிரின் மதிப்பும் அருமையும் தெரிந்தவர்கள் அவர்கள். ஆனால் இப்போது நடப்பது தலை கீழாக அல்லவா இருக்கிறது. என்று சிந்தித்தபடி நடந்து சென்றான்.

முத்துக்குமாரியும் மாரிச்சாமியும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால் வைஷாலி வந்து சேர்ந்ததே தெரியவில்லை.

"பார்த்து போகக் கூடாது? மேலே வந்து மோதுகிறாயே?" என்ற குரல் கேட்டு தான் அனைவரும் நிஜ உலகத்துக்கே வந்தார்கள். வைஷாலி நகரம் அவர்கள் எதிர்பார்த்தவை விட மிக அழகாக இருந்தது. தேர் ஓடும் அளவுக்கு அகலமான வீதிகள், ஆங்காங்கே கடைகள், அவற்றில் பல விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்ப்ட்டிருந்தன. அவற்றில் பலவற்றை கோமதியோ மற்றவர்களோ இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. சிறிய குப்பிகளில் எதையோ அடைத்து விற்றார்கள். மணி மாலைகள் பல வண்ணங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. சட்டி பானைகள் முதல், கரண்டிகள், அகப்பைகள் வரை விற்கும் கடைகள், மற்றவர்களிடம் அன்னதானம் வாங்கி உண்ண இஷ்டம் இல்லாதவர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு உணவு அளிக்கும் விடுதிகள், சத்திரங்கள், என வைஷாலி நகரம் மிக அழகாக இருந்தது.

தலையில் தயிர்ப்பானையை ஏந்தியபடி நடந்து கொண்டிருந்த ஒருத்தியை நிறுத்தி ஆம்ரபாலியின் வீடு எது? என்றாள் முத்துக்குமாரி. அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு தோள்களில் முகத்தை இடித்துக் கொண்டு பதிலே சொல்லாமல் போய் விட்டாள் அவள். இது என்ன? என்று அவர்கள் திகைத்தார்கள்.

வேறு சிலரிடமும் விசாரித்த போது ஒரு சிலர் அவமரியாதையாகப் பார்த்தார்கள், ஒரு சிலர் ஏளனமாகச் சிரித்தார்கள். ஒரே ஒரு ஆள் மட்டும் மரியாதையோடு அவர்களுக்கு ஆம்ரபாலி வீடு செல்லும் வழியைக் காட்டினான். அவனைப் பார்த்து சிரித்த மற்றவர்களை அலட்சியம் செய்து விட்டு போய் விட்டான். அவன் சொன்ன வழியில் சென்ற போது மிகப்பெரிய வீடு வந்தது. அதை வீடு என்பதை விட அரண்மனை என்று சொல்வது தான் சரி. அத்தனை பெரிது. அங்கே பல பெண்கள் நாட்டியம் பயின்றும் பயிற்றுவித்துக் கொண்டும் இருந்தனர். வாயில்கள் திறந்தே தான் இருந்தன. இவர்கள் தாங்கள் ஆம்ரபாலியைக் காண வெகு தொலைவில் இருந்து வருவதாகச் சொன்னதும் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான் ஒரு பணியாளன்.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top