My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சுவர்ண ரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 20.....

IVNP18

Member
Joined
Mar 21, 2025
Messages
58
சுவர்ண ரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 20:



பாடலிபுத்திரத்தை விட்டு மிகவும் தள்ளி அமைந்திருந்த அதே குடிசையில் மீண்டும் ஒரு ரகசியக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பாவனனும் இருந்தான். வழக்கம் போல தளபதி தான் பேசினார்.



"மன்னருக்கு நமது அமைப்பைப் பற்றியும் நாம் செய்து வரும் புனிதப் பணி பற்றியும் தெரிந்து விட்டது. அதோடு நம் தலைவரின் பெயரையும் கூறினேன்." என்றார்.



மற்ற 6 பேரும் ஆழ்ந்த அமைதி காத்தார்கள். அவர்களுக்கே கூட தலைவரையும், தளபதியையும் பார்க்க வேண்டும் என்றும் அவர்களது பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் இருந்தது. ஆனால் கேட்க பயமாக இருந்ததால் அடக்கிக் கொண்டனர்.



"அதற்கு தேவபூதி என்ன சொன்னான்?" என்றார் தலைவர் தன் ஆழ்ந்த குரலில்.



மன்னரை பெயரைச் சொன்னதோடு மரியாதை இன்றி அவன் இவன் என்று தலைவர் குறிப்பிட்டது அங்கே உள்ளவர்களுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

"அவர் மகாராணியாரின் பிடியில் இருக்கிறார். கூடவே ராஜமாதா வேறு. அதனால் நம் கொள்கைகள் தவறு என்றும், பெண்களை அடிமைப்படுத்தக் கூடாது என்றும் சொல்கிறார்." என்றார் தளபதி.

"தேவபூதிக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது. பெண்கள் சன்னியாசியாக ஆவதற்கும், குடும்பத்தை விட்டுப் பிரிவதும் கூட சரி என்றா சொல்கிறான் அவன்?" என்றார் தலைவர் மீண்டும்.

"ஆமாம் தலைவரே! அது மட்டுமல்ல, அது எல்லாமே அவர்களது உரிமை. பெண்களின் உரிமையை மறுக்க ஆண்களுக்கு கொஞ்சம் கூட அதிகாரமே கிடையாது என்றெல்லாம் பிதற்றுகிறார். தனிமையில் சந்தித்து எவ்வளவோ அவர் மனதை மாற்ற முயன்றேன். ஆனாலும் பலன் இல்லை." என்றார் தளபது விரக்தியாக.

ஆழ்ந்த மௌனம் பல நிமிடங்கள் நீடித்தது. தலைவர் மிகவும் கோபமாக இருக்கிறார் என்பது அந்தக் குடிசையின் அதிர்வலைகளிலேயே தெரிந்தது. பாவனனும் மற்றவர்களும் சற்றே அச்சத்தோடு அமர்ந்திருந்தார்கள்.

தனது உடலைப் போர்த்தி இருந்த போர்வையை விலக்கினார் தலைவர். அந்த மபிய வெளிச்சத்தில் பொன் நிறமும், மிகவும் அழகான முகமும் கொண்ட ஒருவர் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள் என்றால் அவர் மிகவும் இள வயதானவர் என்ற உண்மை அவர்களது முகத்தில் அடித்தது. மிஞ்சிப் போனால் 25 வயதுக்குள் தான் இருக்கும். ஆனாலும் முகத்தில் மிகவும் முதிர்ச்சி. அவரது நீண்ட கண்களில் எந்த உணர்வும் பிரதிபலிக்கவே இல்லை. முகம் மட்டும் இறுகி இருந்தது.

"என்ன செய்கிறீர்கள் தலைவரே?" என்றார் தளபதி.

"நம் அமைப்புக்கு நமது அடையாளம் தெரிய வேண்டிய கட்டம் வந்து விட்டது கண்வா! மன்னரின் துணை கிடைக்கும் என்று நினைத்து ஒரு திட்டம் வகுத்திருந்தேன். ஆனால் அப்படி இல்லை என்பதால் நான் ஏற்கனவே வகுத்து வைத்திருந்த மாற்றுத் திட்டத்தை செயல் படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது." என்றார் தலைவர்.

கண்வா என்ற பெயரைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது அங்கிருந்த அனைவருக்கும். மன்னர் தேவபூதியின் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் வசுதேவ கண்வா? அவரா நமது அமைப்பின் தளபதி? அதனால் தான் இத்தனை பணமும், அதிகாரமும் இருந்ததோ? என்று எண்ணி கல்லாக உட்கார்ந்திருந்தனர்.

தலையைக் குனிந்து தலைவரை பணிந்து வணங்கினார். மற்றாவ்ர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மகத நாட்டின் மிக்கியமான அமைச்சர், மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர், அப்படிப்பட்ட வசுதேவ கண்வா, தலைவரை அதுவும் இள வயதானவரை வணங்குகிறாரா? என்று ஆச்சரியத்தோடு பார்த்திருந்தனர்.

"நம்பிக்கைக்கு உரியவர்களே, இப்போது நம் பாரத நாட்டின் தலை சிறந்த ஞானியும், சிந்தனையாளருமான நமது தலைவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவரது பெயர் மநு. வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், கணிதம், வானவியல் என்று இவருக்குத் தெரியாத விஷயங்களே இந்தப் பூமியில் கிடையாது." என்று சொல்லி நிறுத்தினார்.

இம்முறை கேட்டுக் கொண்டிருந்தவர்களின் நெஞ்சு பயத்திலும் மரியாதையிலும் உதறிப் போட்டது.

மநுவா? மநு தர்மம், மநு கணிதவியல், மநு வானவியல் போன்ற நூல்களை எழுதிய மநுவா நமது அமைப்பின் தலைவர்? அவர்களது கரங்கள் தன்னையும் அறியாமல் வணங்கின. தன்னை ஏற்கனவே அங்கிருந்தவர்கள் அறிந்திருந்தது மநுவுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

"நண்பர்களே, உங்களுக்கு என் பெயர் ஏற்கனவே அறிமுகமாகி இருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. காரணம், எனது நூல்களைப் படித்தவர்கள் தான் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். பெண்களுக்கான இடம் எது என்று புரிந்தவர்கள். ஆகையால் உங்களது அறிமுகம் எனக்குக் கிடைத்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி." என்றார் மநு.

மீண்டும் அமைதி நிலவியது. ஆனால் இம்முறை கொஞ்சம் மகிழ்ச்சியும் இருந்தது.

"மன்னர் நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் நமது அடுத்த நடவடிக்கை என்ன தலைவரே?" என்றான் வினோதன் என்ற ஒருவன்.

"நல்ல கேள்வி வினோதா" என்றார் மநு. அத்தனை பெரிய மனிதருக்கு தனது பெயர் தெரிந்திருக்கிறது என்று மிகவும் பெருமைப்பட்டான் வினோதன். அதைக் குறிப்பால் உணர்ந்து கொண்டார் மநு.

"உனது பெயர் மட்டுமல்ல வினோதா! இங்குள்ள ஆறு பேர்களின் பெயரும் எனக்குத் தெரியும். வடபகுதியில் இருந்து வந்திருப்பவன் பாவனன், தெற்கிலிருந்து வந்திருக்கிறானே இவன் பெயர் பூபதி, பாரதத்தின் மேற்கிலிருந்து பவனும், சேஷனும் வந்திருக்கிறார்கள், கிழக்கிலிருந்து ஹரி, மற்றும் நிமாய் வந்திருக்கிறார்கள்." என்றார்.

அங்குள்ளவர்களுக்கு மநு இந்த சிறிய வயதிலும் எப்படி ஒரு மிகப்பெரிய அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்ற உண்மையும் அவரது அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறமை மீதும் பிரமிப்பும் ஏற்பட்டபட்டன.

"வினோதன் கேட்டது மிக நல்ல கேள்வி. நமது அடுத்த திட்டம் நடவடிக்கை இரண்டையுமே நான் முன்பே தீர்மானித்து வைத்திருக்கிறேன். அதில் பெரும் பங்கு கண்வாவின் பொறுப்பு என்றாலும் நீங்களும் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள்." என்றார் மநு.

மநுவின் திட்டம் என்றால் சிறிதளவும் பிசிறின்றிப் போடப்பட்டிருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. எத்தனை கதைகளையும், பெண்களின் பத்தினித் தன்மை குறித்தும் எத்தனை எழுதி இருக்கிறார்? அவற்றை பாரத நாட்டின் பல பகுதிகளிலும் அவரது அமைப்பினரைக் கொண்டு மக்களிடம் சொல்லச் சொன்னார். இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் வட நாட்டில் பேசுபவர்கள் அக்கதைகளையும், சம்பவங்களையும் எங்கோ தெற்கில் நடந்தவை என்று சொல்ல வேண்டும். அதே போல தெற்குப் பகுதியில் பேசுபவர்கள் நாட்டின் மேற்குப்ம்பகுதியில் நடந்தது என்றும் இப்படி பல பகுதிகளில் நடந்தவை என்றும் சொல்ல வேண்டும். கதைகளின் உண்மைத்தன்மைகாக பெயர்களும், நடை பெற்ற ராஜ்ஜியங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மெதுவாக ஆண்களின் மனதை மாற்றிய பெருமை மநுவையே அல்லவா சேரும்? பத்தாண்டுகளாக மனம் சோர்ந்து போகாமல், பாரத நாடு முழுவதும் தன் கொள்கைகளைப் பரப்பவே முடியாது என்ற விரக்தி தோன்றாமல் விடா முயற்சியோடு இத்தனை சாதித்திருக்கிறாரே? மநுவுக்கும், வசுதேவ கண்வாவுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது? நட்பு என்பதை விட கண்வா மநுவை குருவைப் போல அல்லவா பார்க்கிறார்? இவர்களுக்குள் எப்படி அறிமுகம் ஆனது? என்று கேள்விகள் பல எழுந்தன அங்கிருந்தவர்கள் மனதில். ஆனால் கேட்க பயந்து அமர்ந்திருந்தனர்.

"நமது எதிரிகள் புத்தரும் அவரது சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தான். பெண்களுக்கு குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லவும், சன்னியாசம் கொள்ளவும் உரிமை உண்டு என்று அவர் சொல்லி வருகிறார். இவையெல்லாம் எதற்கு? தெரியுமா? பாரத நாட்டில் மக்களே இல்லாமல் செய்வதற்கு தான். அப்படியே மக்கள் இருந்தாலும் பலரும் ஒழுக்கக்கேட்டின் பயனாகப் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்." என்று நிறுத்தினார். பாவனனுக்கு சரியாகப்ம் புரியவில்லை.

"உங்களில் சிலருக்கு நான் சொல்வது புரியாமல் இருக்கலாம். அதை விளக்குவது என் கடமை" என்றார் மநு.

முகபாவத்தைக் கொண்டே ஒருவருக்கு தான் சொல்லும் விஷயம் புரிந்ததா? இல்லையா? என்று இந்த மங்கிய வெளிச்சத்திலும் கண்டு பிடிக்கிறாரே? என்று வியந்து கொண்டான் பாவனன்.

"நம் பாரத் நாடு மிகவும் பழைமையானது, பல மகரிஷிகள், முனிவர்கள் வேதங்கள், உடநிடதங்கள் ஆகியவற்றை இயற்றினார்கள். அதோடு வானியல், கணிதம் என்று பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். யாகங்கள் செய்வதும், அதில் விலங்குகளைப் பலியிடுவதும் தவறல்ல என்றும் ஆனால் குறைந்த அளவில் அதனைச் செய்ய வேண்டும் என்றும் அத்திரி மகரிஷி மற்றும் யாஞ்னவல்கியர் போன்றவர்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் சமூக அந்தஸ்துக்காக இப்படிப்பட்ட யாகங்கள் செய்வதும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் விலங்குகளை பலி கொடுப்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது உண்மை. அதனால் கால்நடைகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதும் உண்மை. ஆனால் அதனைக் குறைக்க வேண்டும் என்று நாம் தான் சொல்ல வேண்டுமே தவிர புத்தன் என்பவன் சொல்லக் கூடாது. ஏனெனில் அவன் யாகமே செய்யக் கூடாது என்கிறான். முக்கியமாக அவன் பெண்களுக்கு அளிக்கும் உரிமை எப்படி நம் வருங்கால சந்ததிகளை பாதிக்கும் என்று சொல்கிறேன் நன்றாகக் கேளுங்கள்" என்று நிறுத்தினார் மநு.

அனைவரின் கண்களும் அவரையே ஆர்வத்தோடு பார்த்தன. பக்கத்தில் இருந்த விளக்கை சிறிது தூண்டி விட்டார். வெளிச்சம் சற்றே அதிகமானது. இப்போது தான் குடிசையின் உட்பகுதி நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு மூலையிலும் கையில் கம்போடு ஒரு கனத்த ஆள் நின்றிருந்தான். இத்தனை நேரமும் நாம் கண்காணிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற உண்மை தெரிய வர மனம் உதறிப் போட்டது பாவனனுக்கு.

"பல காலம் முன்பாகவே பழக்கத்தில் இருந்த ஒன்று தான் மறுமணமும், விதவைத் திருமணமும். ஆனால் அந்தக் காலங்கள் மாறி விட்டன. காலத்துக்கு ஏற்றாற் போல சட்டங்களும் மாற வேண்டும். ஒரு பெண் கணவனைப் பிரிந்து சென்று வாழுகிறாள் அவளுக்கு ஒரு மகனும் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவள் இள வயது என்பதால் அவள் மறுமணம் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அப்போது அவளது முதல் கணவனுக்குப் பிறந்த மகன் ஒரு குடும்பத்தையும் பிறகு பிறக்கும் குழந்தைகள் வேறு குடும்பத்தையும் சேர்ந்தவையாக இருக்கும். இரண்டாவது கணவனிடமிருந்தும் அவள் பிரிகிறாள் என்றால் பிறகு அவள் எத்தனை கணவனை ஏற்பாள்? எத்தனை குழந்தைகள் பெறுவாள்? அப்படியானால் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் பலப்பல குடும்பத்தைச் சேர்ந்ததாக அல்லவா இருக்கும்? பாரம்பரியம், பழக்க வழக்கம், பண்பாடு இவை எதுவுமே அந்தக் குழந்தைகளுக்கு இருக்காதே? கிட்டத்தட்ட நடத்தை கெட்ட பெண்ணின் குழந்தைகள் என்றல்லவா சொல்ல வேண்டி வரும்? குடும்பங்களே நசிந்து போய் விடுமே?" என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு குரு சொல்வது உண்மை தானே? என் மனைவி, எனக்குப் பிறக்கும் மகன் என் குடும்ப வழக்கங்களையும், பாரம்பரியத்தையும் தானே கட்டிக் காக்க வேண்டும்? அவனது அம்மாவின் வழியை எப்படிப் பின்பற்றலாம்? இது அநியாயம் அல்லவா?" என்று தோன்றியது.

"அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் சொத்து உரிமை என்ன ஆவது? ஒரு பெண் பல கணவர்களுக்குப் பல குழந்தைகள் பெற்றுக் கொள்வாள், ஒவ்வொரு குழந்தையின் குடும்பமும் அவளுக்கு சொத்துக் கொடுக்க வேண்டும். இது எப்படி இருக்கிறது? மறைமுகமாக ஒரு பெண்ணை கெட்ட நடத்தைக்குத் தூண்டுவது போல அல்லவா இருக்கிறது? அதனால் தான் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்து விட்டோம். புத்தன் வேறு பெண்களை சன்னியாசியாகு என்று சொல்கிறான். இளம் பெண்கள் சன்னியாசி ஆகி விட்டால், இளைஞர்களுக்கு பெண் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் ஏதோ கோபத்தில் அவன் ஏதோ சோல்ல, அந்தப் பெண் நீயும் வேண்டாம் உன் குடும்பமும் வேண்டாம் என்று சொல்லி பிக்குணியாகி விட்டால் அவன் கதி என்ன? முதல் கல்யாணத்துக்கே பெண் கிடைப்பது கஷ்டம், மறு கல்யாணத்துக்கு பெண் கிடைக்குமா? இரண்டாம் மூன்றாம் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைத்தான் மறுமணம் செய்ய வேண்டி வரும். அவள் உங்களை விட்டுச் செல்ல மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?" என்றார் உணர்ச்சியோடு.

கேட்டுக் கொண்டிருந்தவர்களின் நெஞ்சம் எரிந்தது. நாட்டின் நிலை இப்போது இது தானே? பல பெண்கள் விவாதங்களில் ஈடுபடவும், கணவனைப் பிரிந்து செல்வதுமாகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் ஆண்மகன் எவனும் கற்புள்ள தாய்க்குப் பிறந்தவனாக இருக்க மாட்டான். ஒருவனையே கணவனாக நினைத்து வாழ வேண்டும் பெண்கள். அது தானே கற்பு நெறி? அதைத்தானே சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தச் சொல்கிறார் மநு? இதில் என்ன தவறு? ஆனால் தனி மனிதனான மநு சட்டம் போட்டால், அதை ஏன் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்று யோசித்தான் பாவனன்.

"இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமானால் நமது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு நாம் பல தியாகங்கள் செய்ய வேண்டும். அவை சாதாரண தியாகங்கள் அல்ல. மிக மிக விருப்பமானவற்றை துறக்க வேண்டி வரலாம். அதற்கு நீங்கள் தயரா?" என்றார் மநு.

"நாங்கள் தயார்" என்று ஒரே குரலில் அறுவரும் பதிலளித்தனர்.

"மிக்க மகிழ்ச்சி. எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன். நமது முதல் திட்டம் நாம் இயற்றும் சட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது. ஏற்க மாட்டேன் என்று சொல்பவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி ஊரை விட்டே ஒதுக்கி வைப்பது. அவர்களோடு ஊரில் வாழும் மக்கள் பேசினாலும், பழகினாலும் பாவம் என்ற நிலையை உருவாக்குவது." என்றார்.

வியப்பு, பிரமிப்பு நம்பிக்கையின்மை இவை எல்லாமே ஒரு சேர எழுந்தன பாவனன் மனதுள்.
அடேயப்பா! எத்தனை பெரிய விஷயம்? பாடலிபுத்திரத்துக்கு வெளியே உள்ள ஒரு ஏதோ ஒரு காட்டில் குடிசையில் இருக்கும் 8 பேர் கொண்ட குழுவால் இதனை எப்படி சாதிக்க முடியும்? மன்னரே ஆதரவாக இல்லாத நிலையில் மநு எப்படி இதை சாதிக்கப் போகிறார்?" என்று எண்ணினான் பாவனன்.
"அதற்கு முதல் கட்டமாக நாம் சட்டம் போட்டால் மக்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற அதிகாரம் நம் கைக்கு வர வேண்டும்." என்றார் மநு.

முதுகுத்தண்டில் சில்லென்ற பயம் பரவியது பாவனனுக்கு.



"எப்படி?" என்றான் பவன்.



அவனை நோக்கி சிரித்தார் மநு.

"இன்று பௌர்ணமி, அடுத்த மாதம் பௌர்ணமி நாளன்று மன்னர் தேவபூதி கொல்லப்பட வேண்டும்." என்றார்.

பயத்தில் ஹக் என்ற ஓசையை எழுப்பினான் பாவனன்.
 
அப்போ மநு நூல்... புத்தத்துக்கு பிறகு தோன்றியதா. மந நீதி நூல் என்பது இது தானா
 
ஆமாம் மேடம். மநு நீதி நூல் அல்லது மநு ஸ்மிரிதி புத்தரின் வாழ்ந்த காலத்தில் தோன்றியது தான்.
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top